தாயும் ஆனான் அவன்

நான் நெஞ்சில் மிதிப்பேன் என்று தெரிந்த அன்றே என்னைத் தோள் மேல் தூக்கி உலகத்தைப் பார் என்று காட்டிய என் தந்தைக்கு சமர்ப்பணம்
-----------------------------------------------------------------------------------
முத்தம் கொடுத்தால் முகம் நோகும்
முறுக்கு மீசை வைத்தது போதும் என்பது உன் 
முதல் தியாகம்
கரம் ஊண்டி தரையில் நின்றால்
பாவம் பிஞ்சு கைகள் நோகும் என்பாய்
என் நெஞ்சின் மேல் நடை பழகு என்றாய்
நெஞ்சம் சேர்ந்து நான் உறங்கும் வேளையில்
மூக்கு முனுமுனுத்து அழுத அன்று
உன் நெஞ்சம் சூழ்ந்த உரோம கவசம் துறந்தாய்
நீ பிடித்தால் என் விரல் நோகும் என
என்னை உன் விரல் பிடிக்க வைக்க
நீ கற்றுக் கொண்டாய்
புது செருப்பில் உள்ள பொம்மை நோக கூடாதென 
நான் நடக்கத் தயங்கி அழுத நேரம்
என்னையும் எனக்கு பிடித்த அந்த பொம்மையும்
சுமந்துக் கரையான 
உன் வெள்ளைச் சட்டையில் தெரிகிறது 
கரை படிந்த வெள்ளை நிலா 
ஏன் காதலின் சின்னம் என்று
முழு நேர அசைவ பிரியனான உன்னை 
கொஞ்சம் சைவமாக மாற்றிய பெருமை 
என்னவோ உன்னருகில் அமர்ந்து 
சாப்பிடும் என்னையே சேரும்
என்னைக் கோபமாகத் திட்டிவிட்டுச்
சென்றாய் நீ நான் அழுதது என்னவோ 
ஐந்து நிமிடங்கள் தான் 
அடுத்து நம் வீட்டு தொலைபேசி 
அன்று முழுக்க அழுதது அடுத்ததடுத்த உன் அழைப்புகளால்
உனது வாலிபம் முழுதும் என்னுடனே ஓடியது
எனது வாலிபம் முழுதும் உன்னைத் தவிர்த்தே ஓடியது 
நெஞ்சில் உறங்கிய காலங்கள் கடந்து 
கண்ணில் பேசிக்கொண்ட காலங்களை என்னவென்று சொல்வது
அவன ஷேவ் பண்ண சொல்லு என்று 
நீ அம்மாவிடம் சொல்லும் போது 
ஒரு நமட்டுச் சிரிப்பு வரும் அம்மாவிடம் இருந்து
அதன் அர்த்தம்
"அவன் மட்டும் அன்னிக்கு முத்தம் கொடுக்குறப்போ 
மூஞ்சு சுழிக்காம இருந்துருந்தா 
இன்னிக்கு முறுக்கு மீசை மூணு அடி வளந்துருக்கும்" என்பதே
நீயும் நானும் ஒரு எதிர்மறை
நீ என்னை திட்டுவதும் 
நான் உனக்கு மரியாதை கொடுப்பதும் 
வீட்டுக்குள் மட்டுமே
நான் ஷீ அணிய தொடங்கினேன் 
நீ செருப்பை தைத்து போட தொடங்கினாய்
நான் ஜீன் அணிய தொடங்கினேன் 
நீ வேஷ்டி கட்டப் பழகினாய்
நான் பைக் ஓட்டப் பழகினேன் 

நீ சைக்கிள் மிதிக்கத் தொடங்கினாய்'

நான் மேற்படிப்பு செல்லத் தொடங்கினேன் 
நீ அதிக நேரம் அலுவலகம் செல்லத் தொடங்கினாய்
நான் இருபது வயதைத் தீண்டினேன் 
நீ எங்கோ ஒரு ஓரத்தில் நின்று என்னைத் தேடினாய்
நட்ட விதை நான் நல்ல மரமாக நீ
விட்டுத் தந்த உன் வாழ்க்கை சொல்லும்
உன் கருவறை எவ்வளவு கனமானது என்று
சுட்டெரிக்கும் சூரியனில் நான் 
வேலை தேடி அலைந்த நாட்களும் 
பட்ட அவமானங்களும் சொல்லும் 
எனது வியர்வைத் துளிகள் 
உன்னை எண்ணி கண்ணீர்த் துளிகளாக 
அவதாரம் எடுத்த கதையை
ஒவ்வொரு மீசை நரைத்த கடினமான தந்தையின் 
முகத்திற்குப் பின்னால் 
இன்று வரை ஆசையாக அரவணைக்கும் 
ஒரு பரிசுத்தமான தாய்மை ஒளிந்து கொண்டு சிரிக்கிறது.
-அருள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தங்கை என்னும் உயிர்ச்சொல்

ஆயிரம் முத்தங்கள்

பசலை