தித்தித்த திங்கள் கிழமைகள்


மனம் ஏங்குதே
திடீர் என்று நினைவில் தோன்றும் 
திங்கள் கிழமை வீட்டு பாடங்களுக்கு மனம் ஏங்குதே.
கணிதத் தேர்விற்கு அறிவியல் படித்துச் செல்ல மனம் ஏங்குதே.

இறுதி வரை தொட்டுப் பார்க்கப் பயந்த 
விலங்கியல் எலும்புக்கூட்டைத் தொட மனம் ஏங்குதே.
புதிதாக அட்டை போடப்பட்ட நோட்டுகளை 
நுகர்ந்து பார்த்திட மனம் ஏங்குதே.
கரும்பலகையின் உயரத்தில் 
என் பெயர் கிறுக்க மனம் ஏங்குதே.
அடிக்கு பயந்து ஓடிய படிக்கட்டுகளில் 
தலை சாய்த்து அமர மனம் ஏங்குதே.
பயம் கொண்டு பதுங்கி மறைந்து நின்ற 
தூண்களை கட்டி அணைத்திடவே மனம் ஏங்குதே.
பிரம்புகளுக்கும் மேசைகளுக்கும் 
முட்டி இட்டு முத்தம் தந்திட மனம் ஏங்குதே.
தேர்வு அறைகளில் பயந்து வெறித்து 
நோக்கிய வெள்ளைத்தாள்களுக்கு மனம் ஏங்குதே.
அடுத்த நாள் விடுப்புகள் பொருட்டு 
முந்தைய நாள் இரவு வரும் காய்ச்சல்களுக்கு மனம் ஏங்குதே.
அறிவிப்பின்றி வரும் மரண விடுமுறைகளுக்கு 
கொஞ்சம் வருந்தவும் மனம் ஏங்குதே.
நான் புதைத்து வைத்த மாங்காய் விதை 
முளைத்ததைக் காணவே மனம் ஏங்குதே.
திருட்டுத் தனமாய் கிறுக்கி வந்த 
மொட்டை மாடிப் பெயர்கள் தேடிப் பார்க்க மனம் ஏங்குதே.
சண்டையிட்டு முறைத்துப் பிரிந்து வந்த 
முதல் வரிசை நண்பனிடமும் மன்னிப்பு கேட்க மனம் ஏங்குதே.
கடைசி வரை தனியாக அமர்ந்து சாப்பிட்ட 
மாணவனை நண்பனாக்கிக் கொள்ள மனம் ஏங்குதே.
என் கோபக்கார ஆசிரியரை 
ஒரு முறை கட்டி அணைத்து சிரித்திட மனம் ஏங்குதே.
மாணவனாய் மறுபடியும் 
மணி அடித்ததும் உள்ளே ஓடி வர மனம் ஏங்குதே.
என் வாழ்க்கையைக் கடைசியாக உயிரோட்டத்துடன் 
நான் பார்த்த என் பள்ளியில் ஒரு நாள் 
மீண்டும் வாழ 
மனம் ஏங்குதே
-அருள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தங்கை என்னும் உயிர்ச்சொல்

ஆயிரம் முத்தங்கள்

பசலை